திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6ம் நாள் பிரமோற்சவத்தையொட்டி நேற்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பிரமோற்சவத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்து வருகிறார். பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை ேநற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், மூலவருக்கு ஆண்டு முழுவதும் அலங்கரிக்கப்படும் லட்சுமி ஆரம் கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் தங்க, வைரம், பச்சை மரகதகற்கள் பதிக்கப்பட்ட சிறப்பு ஆபரணங்களால் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் ெசய்யப்பட்டது.
கருட சேவையொட்டி முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி, பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி ஏழுமலையான் ேகாயிலுக்கு கொண்டு வந்து சமர்ப்பித்தார். பின்னர் கருட சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி ராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, மாலை நடைபெற இருந்த தங்க ரத வாகனத்தில் சுவாமி வீதி உலா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதால், அதற்கு மாற்றாக சர்வ பூபால வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதையடுத்து, நேற்றிரவு கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.